Wednesday

'த வீக்

பிரபாகரனுக்கு இன்னும் மன உறுதி இருக்கிறது:அனிதா..

தொடர்ந்து போரிடுவதற்கு பிரபாகரனுக்கு இன்னும் போதிய மன உறுதி இருக்கிறது: பிரபல ஊடகவியலாளர் அனிதா பிரதாப்

இது தொடர்பாக 'த வீக்' ஆங்கில வார இதழுக்கு அவர் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம் வருமாறு:

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு தேசியத் தலைவர், விடுதலைப் போராளி, புரட்சியாளர், கெரில்லா வீரர், கொலையாளி, பாதுகாவலர், கொடுங்கோலர், தொலைநோக்குப் பார்வை கொண்டவர், பயங்கரவாதி எனப் பலருக்கும் பலவகையில் தோற்றம் அளிக்கிறார். அவரைப் போற்றுவதும், தூற்றுவதும் அவரவரின் கொள்கை நிலையைப் பொறுத்தது.

பிரபாகரனின் சிந்தனையில் என்ன ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை என்னால் தெரிந்து கொள்ள முடியாது. ஆனால் அவர் அச்சம் அடையவோ, விரக்தி அடையவோ இல்லை என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும்.

சாவைக் கண்டு அவர் அஞ்சவில்லை. 17 வயதிலிருந்தே அவர் சாவுடன் உறவாடி வருகிறார். அவர் சிறிதும் தளர்ச்சி அடையாத போர் வீரர். அனைத்து நடைமுறை விடயங்களில் இருந்தும் தத்துவஞானி போல விலகி நிற்பவர்.

எனினும், தனது கொள்கைத் திட்டக் குறிக்கோளான தமிழ் ஈழத்தை அடைவதில், ஊசலாட்டம் அற்ற ஈடுபாட்டை வெளிப்படுத்தி வருபவர்.

இந்தப் போர்ப் பின்னடைவுகள், இலட்சியத்தின் மீதான அவரின் நம்பிக்கையை அல்லது உறுதிப்பாட்டை தளர்வடையச் செய்துவிடுமோ, சீர்குலைத்துவிடுமோ, அழித்துவிடுமோ என்பது எனக்கு ஐயம்தான்.
அவர் தனது மக்களின் விடுதலைக்காகவே போராடி வருகிறார் என்பதில் அவர் மனத்தில் மிகவும் தெளிவாக இருக்கிறார். அந்தக் கோட்பாட்டுக்காகவே அவர் வாழ்ந்து வருகிறார். அந்தக் கோட்பாட்டுக்காகவே அவர் போராடி வருகிறார். அந்தக் கோட்பாட்டுக்காகவே அவர் சாவதற்கும் தயாராக இருக்கிறார்.

வெற்றிகளும் தோல்விகளும் வரும், போகும். பிரதேசங்களை இழப்பதும், வெல்வதும் உண்டு. போராளிகள் இறப்பார்கள், தோழர்கள் துரோகம் செய்வார்கள். ஆனால் அவரின் இறுதி மூச்சு வரையில், தமிழ் ஈழத்துக்கே அவர் உண்மையானவராக இருப்பார்.

இந்த மோதல் குறித்து நான் 30 ஆண்டுகளாக எழுதி வருகிறேன். ஆனால் விடுதலைப் புலிகள் இயக்கம் அதனுடைய போராட்டத்தில் இந்த அளவுக்குத் தனியாகவும், நண்பர்கள் இல்லாமலும் இதற்கு முன் ஒருபோதும் இருந்தது இல்லை.


பிரபாகரன் அவரின் சொந்தச் செயற்பாடுகள் மற்றும் உலகச் சூழ்நிலைமைகள் ஆகிய இரண்டும் சேர்ந்த கூட்டுக்கலவையினால் பாதிக்கப்பட்டிருக்கிறார். ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதன் காரணமாக, இந்தியாவை மாற்ற முடியாத கருணையற்ற எதிரியாக அவர் ஆக்கிக் கொண்டார்.

அமெரிக்கா மீது செப்ரெம்பர் 11 இல் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ஜோர்ஜ் புஸ் அறிவித்த பயங்கரவாதத்துக்கு எதிரான போர்க் கொள்கையால், உலகம் முழுவதும் பயங்கரவாதத்தை சிறிதும் சகித்துக் கொள்ளாத ஒரு சூழ்நிலைமை உருவாக்கப்பட்டு இருக்கிறது.

பயங்கரவாத அமைப்புகளுக்கும் தேசிய விடுதலைக் குழுக்களுக்கும் இடையிலான வேறுபாடுகளை இது மங்கச் செய்துவிட்டது.

உலகில் அரசு பயங்கரவாதத்தை எதிர்கொள்ளாத விடுதலைப் படையோ, பதிலுக்குத் தங்களது தேசியவாதக் குறிக்கோள்களை அடைவதற்காக பயங்கரவாதத்தை ஒரு நடைமுறைத் தந்திரமாகப் பின்பற்றாத விடுதலைப் படையோ எதுவும் இல்லை. தான் போற்றி வணங்கும் மாவீரர்களாகப் பிரபாகரன் கருதும் நேதாஜி சுபாஷ் சந்திர போசும், பகத் சிங்கும் இந்தியாவை ஆண்ட இங்கிலாந்து ஆட்சியாளர்களால் பயங்கரவாதிகள் என்று அறிவிக்கப்பட்டவர்கள்தான்.
அண்மைக் காலம் வரையில் நெல்சன் மண்டேலாவும் கூட பயங்கரவாதிகளின் பட்டியலில்தான் வைக்கப்பட்டிருந்தார்.

விடுதலைப் புலிகள் இயக்கம் 30 நாடுகளில் பயங்கரவாத அமைப்பு எனத் தடை செய்யப்பட்டுள்ளது. இது விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழிப்பதற்கான உலகளாவிய ஒப்புதலை சிறிலங்கா அரசுக்கு வழங்கியிருக்கிறது. இவ்வாறு செய்ததன் மூலம், வரலாற்றில் பெரும் பேரழிவு ஆபத்து ஏற்பட உலகச் சமுதாயம் அனுமதித்து விட்டது.

இது விடுதலைப் புலிகளுக்கு நேர்ந்த துன்பம் அல்ல, தமிழர்களுக்கு நேர்ந்த துன்பம்.

ஓராண்டுக்கும் மேலாக, அப்பாவிகளான தனது சொந்த மக்கள் மீதே குண்டு வீசித் தாக்கி வரும் அரசு உலகில் வேறு எங்குமே இருக்காது. இதுபோன்ற குற்றத்துக்கு இஸ்ரேலிய, அமெரிக்க, நேட்டோ படைகள் கூட உள்ளானதில்லை.

மோதல் அற்ற பாதுகாப்புப் பகுதி என்று அறிவிக்கப்பட்ட பகுதியே, தாக்குதல் நடத்தும் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே சிக்கியுள்ள அப்பாவித் தமிழ் மக்களுக்குப் பெரிய சாவுக் களமாக மாறி வருகிறது.

வெளி ஆட்கள், சுதந்திரமான சாட்சிகள் இல்லாமல் உலகில் எங்குமே போர் நடத்தப்பட்டது இல்லை. ஈராக்கில் இல்லை, ஆப்கானிஸ்தானில் இல்லை, காசா பகுதியில் இல்லை. ஆனால் இலங்கையில், போர்ப் பகுதிக்குச் செல்ல செய்தி ஊடகங்களுக்கும், தன்னார்வ அமைப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு உதவிப் பணியாளர்களைக் கொண்டுள்ள ஒரே அமைப்பான அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம், அங்கு அப்பாவி மக்கள் பேரழிவு நிலைமையில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

இரண்டரை இலட்சம் தமிழ் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் அகதிகள் முகாம்களில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர், முடமாக்கப்பட்டுள்ளனர்.

பிரபாகரனை ஆதரித்ததால் தமிழ் மக்களுக்கு இந்தக் கதி வேண்டியதுதான் என்று சொல்பவர்கள் இதயமற்றவர்கள், குருடாகிப் போனவர்கள். பிரபாகரனை ஆதரிக்கிறவர்களும் இருக்கிறார்கள், ஆதரிக்காதவர்களும் இருக்கிறார்கள். எப்படி இருந்தாலும், அவர் மீது செல்வாக்கு செலுத்தக்கூடிய சக்தி அவர்களுக்கு இல்லை.
இந்நிலையில் சாதாரண அப்பாவி மக்களைத் தண்டிப்பதை நியாயப்படுத்த முடியுமா? ஈராக்கில் புஷ் செய்த பாவத்துக்காக அமெரிக்க
மக்களை கொல்வது, அவர்கள் புஷ்சை இருமுறை தேர்ந்தெடுத்தவர்கள் என்ற போதிலும், நியாயம் ஆகுமா? சிறிலங்கா படைகள் விடுதலைப் புலிகளை அழிக்க முயல்வதில் தவறு காண முடியாது. ஆனால், அந்த நடைமுறையில், தமிழ் மக்களையும் அவர்களது தாயகத்தையும் சிறிலங்கா அரசு அழிப்பதை நியாயப்படுத்தவோ மன்னிக்கவோ முடியாது.

ஆனால் இது பிரபாகரனை வலுப்படுத்தவே செய்யும். விடுதலைப் புலிகள் போரை வரவேற்கிறார்கள் என்பதை அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்.


ஏனெனில் அது அவர்களின் அணிகளை பெருகச் செய்கிறது, குறிக்கோள் மீது அவர்களின் உறுதிப்பாட்டை மீண்டும் வலுப்படுத்துகிறது, தனிநாடு கோரிக்கைக்கு இன்னும் உணர்ச்சிமயமான ஆதரவை உருவாக்குகிறது. நான் பார்த்த முந்தைய போர்களில் (அப்போது செய்தியாளர்கள் போர்ப்பகுதிக்குள் செல்ல முடிந்தது) இருந்து, விடுதலைப் புலி போராளிகள் போரிடுவதை விரும்புகிறார்கள் என்று தெரிந்து கொள்ள முடிந்தது.

சமாதான காலத்தில் விடுதலைப் புலி கெரில்லாக்கள் கட்டுப்பாட்டுடனும், நிதானத்துடனும் இருக்கிறார்கள். போர்க் காலத்தில் முற்றிலும் மாறுபட்டு அதிக உணர்ச்சியும் மகிழ்ச்சியும் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

விடுதலைப் புலிகளின் கதை முடிந்துவிட்டது என்று இதற்கு முன்பும் பலமுறை கூறப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் பிரபாகரன் பலமுறை 'கொல்லப்பட்டிருக்கிறார்' அல்லது 'கொல்லப்படும் நிலையை நெருங்கியிருக்கிறார்.' அவரது பதுங்கு குழியைப் படையினர் எப்போதேனும் நெருங்கும் எனில், பிரபாகரன் தனது சயனைட் குப்பியைக் கடித்து விழுங்கி காவிய நாயகன் நிலையை அடைந்துவிடுவார்.
"தந்திரமான மதிப்பீடுகள் இல்லாத நிலையில், இதுதான் முடிவு ஆட்டம் என்றும், இதுதான் பிரபாகரனின் கடைசி நிலை என்றும் சிறிலங்கா அரசு கூறி வருவதையே பத்திரிகையாளர்களும் திருப்பிச் சொல்லி வருகிறார்கள்.

கடந்த கால அனுபவத்தை வைத்து மதிப்பிடும்போது, இதை நான் சந்தேகிக்கிறேன். பிரபாகரனின் பிடியில் இருந்து கடைசித் துண்டு நிலத்தையும் சிறிலங்கா படை கைப்பற்றிவிடும் என்பது உறுதி. ஆனால், விடுதலைப் புலிகள் இயக்கமே முடிந்துவிட்டது என அதற்குப் பொருளாகாது. அவர்கள் தாங்கள் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றுள்ள, யாரும் எதிர்பாராத நிலையில் தாக்கும் கொரில்லா போர்முறைக்குத் திரும்புவார்கள். ஒரு பிரதேசத்தைக் கைப்பற்றுவது வேறு என்பதையும், அதைத் தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பல்வேறு சிக்கல்களை எழுப்பும் என்பதையும் ஏற்கெனவே பல்வேறு படைகள் உணர்ந்திருக்கின்றன.


பிரபாகரன் இதற்கு முன்பும் போர்களில் தோற்றிருக்கிறார். சொந்தப் படை, காவல்துறை, நீதிமன்றங்கள், வரி விதிப்பு முறை முதலியவற்றைக் கடந்த காலத்தில் ஒருமுறை அல்ல பலமுறை அவர் உருவாக்கி இருக்கிறார் அவை எல்லாம் அழித்து ஒழிக்கப்பட்டிருக்கின்றன. எல்லாவற்றையும் மீண்டும் அவர் தொடங்கி உருவாக்கி இருக்கிறார்.

54 வயதாகும் பிரபாகரனிடம், மீண்டும் தொடங்குவதற்கும், மேலும் 20 ஆண்டுக் காலம் தொடர்வதற்கும் இன்னும் போதிய மன உறுதி இருக்கிறது. இன்று பிரபாகரனின் நிலைமை ஆபத்துக்கும் அச்சத்துக்கும் உரியதாகத் தோன்றுகிறது. ஆனால் நல்வாய்ப்புச் சக்கரம் அப்படியே நிற்பதில்லை.

நிலைமைகள் மாறும். அமெரிக்கா மாறியிருக்கிறது. உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. முதலாளித்துவம் மதிப்பிழந்து விட்டது. சோசலிசம் பின்வாசல் வழியாக நுழைந்து கொண்டிருக்கிறது. பெரிய வங்கிகள் எல்லாம் நொடித்துப் போய்விட்டன. தலைப்புச் செய்திகளில் வளவாழ்வுச் செய்திகளுக்கு மாற்றாக துன்பச் செய்திகள் இடம்பிடித்து வருகின்றன.

புதிய காற்று கடந்த காலத்தின் அதீத நம்பிக்கைகள் பலவற்றையும் தூக்கி வீசி வருகிறது. உலக அரங்கில் புதிய வாய்ப்புகள், அணி மாற்றங்கள், முன்மாதிரிகள் நிகழ்ந்து வருகின்றன. அவற்றின் தாக்கம் வெகுதொலைவில் இலங்கையில் உள்ள மூலை முடுக்குகளிலும் உணரப்படும். கண்ணீர்த் துளி வடிவில் அமைந்த அந்த அழகிய மரகதத் தீவு அமைதியுடன் உறவாடுவதற்காக காத்திருக்கிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday

தமிழர்களின் வரலாறு தொடர்ச்சி ........

அவை அடிப்படை மனிதநேயம் சார்ந்த பலரது நிலைப்பாடுகளில் மாற்றுக் கருத்தாக்கங்களைக் கொண்டிருந்தாலும், காலத்தின் தேவை என்பதும், ஒடுக்கப்படும் உயிரின எழுச்சிகளின் வரலாற்றில் தவிர்க்க இயலாதது என்பதும் உலக இயங்கியல் என்கிற அறிவியல் கோட்பாடுகளை ஆழ்ந்து படிப்பவர்களும், விடுதலைப் போராட்ட வரலாற்றை ஆய்வு செய்பவர்களும் நன்கு அறிவார்கள்.

புலிகளைப் பற்றிய கடும் மரண அச்சத்துடன் இலங்கை படையணி வீரர்களும், இலங்கை ராணுவ தாக்குதல்களைப் பற்றிய கடும் அச்சத்துடன் தமிழ்த் தேசிய இனமும் ஒரு இக்கட்டான அரசியல் மற்றும் நிலப்பரப்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், மரணம் என்பதும் வேதனை என்பதும் மனிதர்கள் அனைவருக்கும் பொதுவானதாகவும், அவற்றை உறுதி செய்ய எம் எதிரிகளும் துயர் கொள்ளக் கூடாது என்கிற உயரிய போர்முறைகளை, மனித நேயம் சார்ந்த பல்வேறு கட்டுப்பாடுகளை விடுதலைப்புலிகள் வைத்திருக்கிறார்கள் என்பதும், பல்வேறு உலக நாடுகளின் அமைதிக் குழுக்களுக்கும், உலகளாவிய ஊடகவியலாளர்களுக்கும் நன்றாகவே தெரியும்.

கடந்த 2006 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் அமெரிக்காவில் " HOUSE INTERNATIONAL RELATIONS" என்கிற ஒரு அமைப்பு, நாடுகளுக்கிடையிலான உறவுகள் மற்றும் மேம்பாடுகள் குறித்த ஒரு கூட்டத்தைக் கூட்டியது. இதில் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு சார்பாக அதன் செயலர் திரு.டொனல்ட் கேம்ப் (MR.DONALD CAMP) பேசினார், வழமை போல தீவிரவாதம் குறித்த அவரது உரையின் நடுவே குறுக்கிட்டுப் பேசிய அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர், (அதாவது காலிபோர்னியா மாகாணத்தில் இருந்து தேர்வு செய்யப்பட அமெரிக்கக் காங்கிரஸ் செனட் உறுப்பினர்) திரு.பிராட் சார்மேன் (MR.BRAD SHERMAN) பல்வேறு கேள்விகளுக்கு நடுவே ஒரு ஆய்வுக்குரிய கேள்வியைக் கேட்டார், அந்தக் கேள்வி " பயங்கரவாதத் தாக்குதலுக்கும், சட்டபூர்வமான கெரில்லாத் தாக்குதலுக்கும் என்ன வேறுபாடு?", இதைக் கூட விட்டு விடலாம், இன்னொரு மிக அழகான கேள்வியையும் அவர் கேட்டார், அந்தக் கேள்வி "அல் கொயதாவிர்க்கும் அமெரிக்க விடுதலைப் போராட்ட வரலாற்றில் பங்கேற்ற எங்கள் ஜார்ஜ் வாஷிங்க்டனுக்கும் என்ன வேறுபாடு? உங்கள் பார்வையில் அவரும் ஒரு பயங்கரவாதியா? இந்தக் கேள்வியைக் கண்டு நிலை குலைந்து போன திரு.டொனல்ட் கேம்ப் (MR.DONALD CAMP), பதில் அளிக்க இயலாமல் குழம்பிய காட்சியை நீங்கள் அனைவரும் இணையங்களில் கூடக் கண்டடையலாம்.
இன்றைக்கு தமிழகத்தில், உருவாகி இருக்கும், எழுச்சி அலையானது, ஈழத்தில் துயருறும் எம் தமிழ்மக்களை மட்டுமன்றி, அரசியல் அறிவற்று, அன்றாட வாழ்வியல் போராட்டங்களில் கணந்தோறும் உழைக்கும் வர்க்கத்தில் உறைந்து போயிருக்கும் சிங்களபேரினத்தின் மக்களும் அமைதியை அடையட்டும், மனிதம் தழைக்கப் பிறந்த தமிழனின் பெருமையை சிங்களனும் உணரட்டும் என்று ஒரு உணர்வுள்ள தமிழனாக உங்கள் சார்பில் மனிதச் சங்கிலியின் ஒரு ஓரத்தில் நின்றிருப்பேன். என்னைத் தேடாதீர்கள், நீங்கள் தான் நான்.

விடுதலைப்புலிகள் உண்மையில் தீவிரவாதிகளா? நீங்கள் தான் சொல்ல வேண்டும் தமிழர்களே......

தமிழர்களின் வரலாறு தொடர்ச்சி .....

தமிழ் இளைஞர்கள் 1968 களில் தங்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்காக ஆயுதம் ஏந்த வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டார்கள், தொடர்ந்து தற்காப்பு மற்றும் இன ஒடுக்கலுக்கு எதிரான நிலைப்பாடுகளில் பல்வேறு குழுக்களாக இயங்கிய ஆயுதப் போராட்டக் குழுவினர், "கருப்பு ஜூலை" என்று இலங்கை வரலாற்றில் மட்டுமன்றி மனித சமூகமே வெட்கித் தலைகுனிய வேண்டிய ஒரு அவல நிலையான வெறிகொண்ட பேரினவாதத் தாக்குதலை சந்தித்த பின்பு ஒரு மிகப் பெரும் எழுச்சியை போராட்ட நிலைப்பாடுகளில் கண்டது, தமிழ் மக்கள் ஆடைகள் களையப்பட்டு, நிர்வாணமாக தெருக்களில் இழுத்துச் செல்லப்பட்டார்கள், தந்தையின் எதிரில், கணவன்மாரின் எதிரில் எம்குலப்பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளானார்கள், எம் தமிழ்க் குழந்தைகள் ராணுவ வீரர்களால், கால்களைப் பிடித்துக் கொண்டு சாலைகளில் துவைத்து மண்டையைப் பிளந்து கொல்லப்பட்டார்கள். குழுக்கள், குழுக்களாக எம் தமிழ்மக்கள் எரித்துப் படுகொலை செய்யப்பட்டார்கள். இவற்றை எல்லாம் பார்த்துக் கொதித்தெழுந்த தாய்த் தமிழ் மக்கள் மிகப்பெரும் நெருக்கடியை இந்திய பார்ப்பனீய மேலாதிக்க அரசுகளுக்குக் கொடுத்த போதுதான், இந்திய அரசும், தமிழக அரசும், தங்கள் தொப்புள் கொடி உறவுகளுக்காக அவர்களின் உரிமைகளுக்காக பல்வேறு போராட்டங்களையும், உதவிகளையும் செய்தார்கள். அதன் பிறகு தொடர்ச்சியாக நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளின் பதிவுகளும், கொடுமைகளும் நமக்குத் தெரியும் என்பதாலும், நீண்ட நெடிய துயரம் மட்டுமே அவற்றில் தோய்ந்து இருக்கும் என்பதாலும் அவற்றை பிறிதொரு காலத்தில் விரிவாகப் பதிவு செய்ய முனைகிறேன்.

காலத்தின் கட்டாயத்தால் மிகப்பெரும் நெருக்கடிகளைச் சந்தித்த தமிழ் இளைஞர்கள், வேறுவழியின்றி ஆயுதம் தாங்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப் பட்டார்கள், வெவ்வேறு குழுவாக பிரிந்து கிடப்பது, விடுதலை இயங்கியல் போராட்ட வரலாற்றை நீர்த்துப் போகச் செய்யும் என்கிற சமூக அறிவியல் உண்மையை உணர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பல்வேறு போராட்டக் குழுக்களை ஒருங்கிணைக்க முயன்றார் அல்லது வேறு வழியின்றி ஒழித்தார்.

தமிழர்களின் வரலாறு தொடர்ச்சி .......

1972 ஆம் ஆண்டுக்கு முன்னர் நிலவிய ஒரு தேர்தல் சூழலில் தான் " தந்தை செல்வா" என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட திரு.S.J.V செல்வநாயகம் "தமிழரசுக் கட்சி" என்கிற ஒரு அரசியல் நகர்வை தேர்வு செய்து பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுகிறார், ஒருதலைப் பட்சமான இலங்கை அரசின் பேரினவாத நடவடிக்கைகளைக் கண்டித்து தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை உதறித் தள்ளிய தந்தை செல்வா, ஒரு இடைத் தேர்தலை சந்தித்து தமிழ் மக்களின் ஒருங்கிணைந்த ஆதரவில் மிகப்பெரும் வெற்றி அடைகிறார், வெற்றி அடைந்தது மட்டுமன்றி இலங்கைப் பாராளுமன்றத்தில் " தமிழ் மக்கள் தனியானதொரு ஆட்சியைப் பெறுவதைத் தவிர வேறு வழியற்ற நிலைக்கு சிங்களப் பேரினவாத அரசால் தள்ளப்பட்டிருக்கிறார்கள் " என்று கர்ஜனை செய்கிறார்.

இந்த நிலையில் பல்வேறு அரசியல் செயல்பாடுகளில் மாற்றுக் கருத்துக் கொண்டிருந்த இலங்கை தமிழ் மக்களும், அரசியல் இயக்கங்களும் இணைந்து " தமிழர் விடுதலைக் கூட்டணி" என்கிற ஒரு புதிய அமைப்பை உருவாக்கி தங்கள் அரசியல் களங்களை வலிமைப் படுத்திக்கொண்டார்கள், தொடர்ந்த பல்வேறு அரசியல் ஒருங்கிணைவுகளில் 1977 பாராளுமன்றத் தேர்தல்களில் அதிகப்பட்சமாக 17 பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழர்களின் சார்பில் தேர்வு செய்யப்பட்டு, தமிழீழம் என்கிற பாதையை நோக்கியே நாங்கள் செல்கிறோம் என்பதையும், அதனை அமைதி வழியிலோ இல்லை போராட்ட வடிவிலோ பெற்றே தீருவது என்கிற முடிவுக்கு வந்தார்கள். இதுதான் வரலாற்று உண்மை.

இன்று பார்ப்பன, பேரினவாத அரசுகளும் உலக ஏகாதிபத்தியங்களும் ஊடகங்களில் பரப்பும், "ஆயுதம் தாங்கிய புலிகள் அமைப்பு" 1980 களில் தான் " தமிழீழம்" என்கிற ஒரு கோரிக்கையை முன்னெடுத்தது என்பது ஒரு வரலாற்றுத் திரிப்பு மட்டுமன்றி, ஒட்டு மொத்த தமிழ் மக்களின் விடுதலை உணர்வை எள்ளி நகையாடும் ஒரு பித்தலாட்டம் என்பது இலங்கையின் அரசியல் வரலாற்றைத் தொடர்ந்து கூற்றியல் நோக்கில் ஆய்வு செய்யும் எவரும் ஒப்புக் கொள்வார்கள்.

தமிழர்களின் வரலாறு தொடர்ச்சி

சரியான திசையில் பயணிக்க வேண்டிய இலங்கையின் சமூகப், பொருளாதார வளர்வு நிலைகள் விடுதலைக்குப் பின்னர் S.W.R.D பண்டாரநாயகாவின் ஆட்சிக் காலத்தில் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்ட சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என்கிற ஒரு முறையற்ற செயல் திட்ட முன்வரைவால் தனது அழிவை நோக்கித் திரும்பியது. தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட, அடிப்படைக் கல்வியை தமிழில் கற்ற தமிழர்களின் நிலையும், அவர்களின் வேலை வாய்ப்புகளுக்கான நிலைத் தன்மையும் இதனால் கேள்விக்குறியாகியது,தமிழர் பகுதிகளின் வளர்ச்சி வாய்ப்புகளுக்கான நிதிஒதுக்கீடு குறைக்கப் பட்டது, பாதுகாப்புப் பணிகளில், படையணிகளில் தமிழர்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டனர், 1958 இல் தமிழ் மக்களின் மீது ஏவிவிடப்பட்ட வன்முறைகளும், அரசியல் பின்புலமும் தமிழர்களின் வாழ்வுரிமையை கேள்விக்கு உள்ளாக்கியது மட்டுமன்றி, இலங்கையில் வாழும் தமிழர்கள், இலங்கையின் அதிகாரப் பூர்வக் குடிமக்களா என்கிற அளவில் வந்து நின்றது.

இதனிடையே, 1972 இல் குடியரசுச் சட்ட அமைப்பு உருவாக்கப்பட்டு மேற்கண்ட கேள்விகளை அரசாட்சி முறையாகவே சிங்கள பெரும்பான்மை அரசு முன்னெடுத்தது. 1950 இல் இருந்து தொடங்கிய சிங்களப் பேரினவாத அரசின் ஒருதலைப் பட்சமான போக்கினை எதிர்க்கும் முகமாக ஒரு எதிர்வினையாக திரு.சி.சுந்தரலிங்கனார் தலைமையில் "ஈழத்தமிழர் ஒற்றுமை முன்னணி" என்கிற அமைப்பு உருவாகி, தமிழர்களுக்கான "சுயாட்சி" என்கிற கொள்கை அவரால் முன்வைக்கப் படுகிறது. இதற்கு முன்னரே 1918 இல் திரு.விஸ்வலிங்கம் என்பவர் தனித்தமிழ் நாட்டின் கோரிக்கையை ஆங்கில அரசிடம் வைத்ததும், 1924 இல் திரு.பொன்னம்பலம் ராமநாதன் உருவாக்கிய தமிழர்களுக்கான ஒரு தனி அரசியல் பார்வையும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் திரு.சுந்தரலிங்கனார் அவர்களே " தமிழீழம்" என்கிற ஒரு குறியீட்டு அடையாளத்திற்கான காரணியாகவும், தமிழ் தேசிய இனத்தின் உரிமைப் போரை முதன் முதலாகத் துவக்கியவறுமாவார். பிற்காலத்தில் இவர் " வன்னிச் சிங்கம்" என்கிற அடைமொழியால் அழைக்கப்பட்டார்.1972 இல், இலங்கைப் பிரதமர் திருமதி சிறிமாவோ பண்டாரநாயகா ஒருதலைப்பட்சமாக உருவாக்கிய ஓட்டுப் பொறுக்கி அரசியல் தந்திரத்தால் கொண்டு வரப்பட்ட சட்ட முன்வரைவுகளே இலங்கையில் வாழும் தமிழ் மக்களை ஒரு கடும் சமூகப், பொருளாதார நெருக்கடிகளை நோக்கித் தள்ளியது. போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய சூழலை அவர்களுக்கு உருவாக்கியது.

தமிழர்களின் வரலாறு

இந்தக் கேள்விக்கான சரியான விடை நமக்குத் தெரிய வருமேயானால், இலங்கையில் நடக்கின்ற ஒரு இன விடுதலைப் போராட்ட வரலாற்றின் முழுமையான சாரம் நமக்குக் கிடைக்கும்.

இந்தக் கேள்விக்கான விடையை நோக்கிப் பயணப்படும்போது இலங்கையின் ஆதியான வரலாறு நமக்குத் தெரிய வேண்டிய அவசியம் இருக்கிறது, ஆனால், அந்த வரலாற்று ஆய்வுகளில் ஈடுபடுவது இன்றைய சூழலில் ஒரு தேவையற்றதானதாகவும், எரிகின்ற வீட்டில் எத்தனை ஓடுகள் இருந்தன, அந்த வீட்டை யார் கட்டியது போன்ற பயனற்ற ஆயவுகளாகவே இருக்கும். இருப்பினும், இலங்கையின் ஒரு குறைந்தபட்ச வரலாறு நாம் அறிந்து கொள்ள வேண்டியதே.

போர்த்துக்கீசியர்கள் 1505 ஆம் ஆண்டு வணிக நோக்கில் இலங்கையில் நுழைகிறார்கள், அந்த நேரத்தில் இலங்கையில் மூன்று நிலப்பரப்பு சார்ந்த அரசுகள் இருந்தன, அவை முறையே, கோட்டை அரசு, கண்டி அரசு மற்றும் யாழரசு (சீதாவாக்கை), இவற்றில் முதலிரண்டும், சிங்கள அரசுகளாகவும், கடைசி தமிழ் அரசாகவும் இருந்தது. தொடர்ந்த பல்வேறு சூழியல் காரணிகள் மற்றும் வாழ்வியல் பயணங்களைச் சந்தித்த இலங்கை, 1802 இல் ஆங்கிலக் காலனியாதிக்கத்திற்கு உட்பட்டபோது ஆமியன்ஸ் (Amiens Agreement) ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அதனுடன் இணைக்கப்பட்ட இலங்கையின் வரைபடங்கள் இந்த மூன்று அரசுகளையும் தனித்தனியே சுட்டிக் காட்டுகிறது.

இதற்கு முன்னர் கிலேகான் (SIR.HUGH CLEGHORN) ஒரு தனிப்பட்ட வரலாற்றுக் குறிப்பை ஆங்கில அரசுக்குக் கொடுக்கிறார், அதில் தெளிவாக பண்டைக் காலம் தொட்டு இலங்கையின் வடகிழக்கு நிலப்பரப்பு தமிழர்களின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தது என்பதையும், சிங்களஇனம், மொழி, கலாச்சாரம் தமிழர்களின் மொழி, கலை, கலாச்சாரக் கூறுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கிறது என்றும் ஒரு வரைவை, பல்வேறு ஆய்வுகளுக்குப் பின்னர் அளிக்கிறார். பின்னர் படிப்படியாக மூன்று வெவ்வேறான அரசுகளுமே ஆங்கில ஆட்சிக்கு உட்படுத்தப்பட்டது என்பதும், நிர்வாக வசதிகளுக்காக, ஆட்சி முறைமைகளுக்காக ஆங்கில அரசு வழமை போல (அதாவது இந்தியாவில் நடந்ததைப் போலவே) இலங்கைத் தீவு முழுதையுமே ஒரே கட்டுக்குள் கொண்டு வந்தது, 1948 இல் இலங்கை ஆங்கில ஆதிக்கத்தில் இருந்து விடுதலை அடைகிறது. இது ஒரு சுருக்கமான இலங்கையின் விடுதலைக்கு முந்தைய வரலாறு.